மேட்டுப்பாளையம், மே 7: மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாகவே ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும், வனவிலங்குகளை கண்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் குஞ்சப்பனை அருகே குட்டியுடன் கூடிய இரு காட்டு யானை உலா வந்தன. காட்டு யானை உலா வருவதை கண்டும் அச்சமில்லாமல் வாகன ஓட்டிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இது குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, யானைகள் அவ்வழியே வந்த கார் ஒன்றை பிளிறியபடி ஆக்ரோஷமாக துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து தாங்கள் வந்த வழியே காரை திருப்பி சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே சாலையில் இதே பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஆவேசமாக வாகனங்களையும் வாகன ஓட்டிகளையும் தாக்க முற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post குஞ்சப்பனை அருகே குட்டியுடன் வந்த காட்டு யானை காரை துரத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.
