உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி. ‘‘அரசியல் சாசன பிரிவு 142 கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது” என்று நீதியரசர்கள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை. இந்த அரசியல் உரிமையை, சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி இந்த விழாவிற்கு வர இயலவில்லை. அவர் இங்கு இல்லையென்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அபிஷேக் சிங்விக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், ராகேஷ் திவேதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டுகிறேன். வழக்கறிஞர் பெருமக்களே உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள், அமைப்புகள், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மாநில மக்களுக்கும், மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும், வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும், வாதிட்ட வழக்கறிஞர்கள், தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி. இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, அண்ணா வலியுறுத்தி, கலைஞர் முழக்கமாக வடித்து கொடுத்ததுதான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியைப் பெறுவோம், கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து வழக்கறிஞர் வில்சன் பேசுகையில், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களது பதவியை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தும் ஆளுநர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்குமானது என தெரிவித்தார்.
மேலும் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஆளுநர் என்பவர் மாநிலங்களில் அமைக்கப்படும் அமைச்சரவைக்கு ஆலோசனைகள் வழங்கலாமே தவிர, தனது வரம்பு மீறி நடந்து கொள்ளக்கூடாது. தற்போது உச்சநீதிமன்றம் அதை சரிசெய்துள்ளது என குறிப்பிட்டார். இறுதியாக வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பேசுகையில், ‘‘பாராட்டு விழாவில் எங்களுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால் உண்மையாக செங்கோலுக்கு தகுதியுடையவர் முதல்வர் ஸ்டாலின் தான். பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தை சரியான பாதையில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்’’ என பேசினார். இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கை வென்றெடுக்க வழிகாட்டி இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.
