கோவையில் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாட்டிற்கான இலச்சினை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களை உலக தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாக கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் “உலக புத்தொழில் மாநாடு -2025” என்ற மாபெரும் நிகழ்வினை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் விரைவில் நடத்த உள்ளது. இந்த உலக புத்தொழில் மாநாடு -2025ல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், பல்கலைகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்தொழில் சூழமைவு செயல்பாட்டாளர்களை 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த மாநாட்டினையொட்டி விண்வெளி தொழில்நுட்பம், காலநிலை மாற்ற மேலாண்மை, மின் வாகனத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புத்தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், பெரு நிறுவனங்கள், தொழில் வளர் காப்பகங்கள் பங்கேற்கும் 750 அரங்குகளை கொண்ட மாபெரும் புத்தொழில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. மேலும், மாநாட்டினையொட்டி அறிவுசார் கருத்தரங்குகள், சந்தை வாய்ப்புகளை உருவாக்க விற்பனையாளர், வாடிக்கையாளர் சந்திப்புகள், முதலீட்டாளர் சந்திப்புகள், புத்தாக்க காட்சி அரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் கோவையில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு -2025”க்கான இலச்சினையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த தளம் மாநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், உரையாளர்கள் குறித்த தகவல்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாட்டிற்கு வருபவர்கள் எளிமையாக பதிவு செய்யவும், முப்பரிமாண வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் அரங்க அமைப்பினை பார்வையிட்டு தங்களுக்கான அரங்குகளை பதிவு மேற்கொள்ளும் வகையிலும் இணையதளம் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கோவையில் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாட்டிற்கான இலச்சினை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: