தேன்கனிக்கோட்டை, ஏப்.24: தேன்கனிக்கோட்டை அருகே, தக்காளி தோட்டத்தை நாசம் செய்த ஒற்றை யானையை, அடர்ந்த காட்டிற்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நொகனூர் வனப்பகுதியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு வெளியே வந்த ஒற்றை யானை, திம்மசந்திரம் கிராம பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து, உணவு தேடி சுற்றி திரிந்தது. அப்போது, வெங்கடசாமி என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து விட்டு சென்றது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயி, தக்காளி தோட்டம் நாசமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுமார் ரூ.1 லட்சம் செலவு செய்து பயிரிட்ட தக்காளி தோட்டம், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நாசமானதால் விவசாயி வேதனை அடைந்தார். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தக்காளி தோட்டத்தை நாசம் செய்த யானை appeared first on Dinakaran.