சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க வீடுவீடாக சென்று அன்புமணி அழைப்பு


சென்னை: பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா கடந்த 1998ம் ஆண்டு முதல் மாமல்லபுரம் கடற்கரையில் நடந்து வந்தது. தொடர்ந்து, 2013ம் ஆண்டும் சித்திரை முழுநிலவு பெருவிழா நடந்தது. பின்னர், தொல்லியல் துறை தடை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. இந்நிலையில், பாமக தொண்டர்கள் மற்றும் வன்னிய சங்கத்தினர் அதிகளவில் கூடும் வகையில், மாமல்லபுரத்தை தவிர்த்து மாற்று இடத்தில் மீண்டும் சித்திரை முழுநிலவு பெருவிழா நடத்த பாமக முடிவு செய்தது. அதன்படி, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை இசிஆர் சாலையையொட்டி சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், பாமக சார்பில் பாமக செயல்தலைவர்அன்புமணி நேற்று பட்டிபுலம் மற்றும் கிருஷ்ணன்காரணை பகுதிகளுக்கு சென்றார்.

அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாமகவினரின் வீடுகளுக்கு நேரில் சென்ற அன்புமணி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான அழைப்பிதழை பொதுமக்களிடம் அளித்து குடும்பத்தோடு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, அன்புமணி கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் நமது சமுதாயம் பின்தங்கிய நிலையில் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நமது சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சமுதாயத்தை சேர்ந்தவர்களே அதிகமாக மது குடிக்கின்றனர். எனவே, அனைவரும் கலந்துகொண்டு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.

The post சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க வீடுவீடாக சென்று அன்புமணி அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: