கேரளாவில் இளம்பெண் எரித்துக் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே குடித்துவிட்டு ரகளை செய்வதாக போலீசில் புகார் அளித்த இளம்பெண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்கத்து கடைக்காரர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பேடகம் பகுதியைச் சேர்ந்தவர் ரமிதா (32). அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். அவரது கடைக்கு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமாமிர்தம் (57) என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு ரமிதாவின் கடைக்கு சென்று ரகளையில் ஈடுபடுவது வழக்கமாம்.

இது குறித்து ரமிதா சில தினங்களுக்கு முன்பு பேடகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் கேட்காததால் ராமாமிர்தத்தின் கடையை பூட்டி சீல் வைத்தனர். இது ராமாமிர்தத்திற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரமிதா வழக்கம்போல கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ரமாமிர்தம், பர்னிச்சர் கடைக்கு பயன்படுத்தும் தின்னரை திடீரென ரமிதாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடலில் தீ பற்றியது. இதைப் பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து விரைந்து சென்று தீயை அணைத்து ரமிதாவை மீட்டனர். அதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக ரமிதாவை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்ப முயன்ற ராமாமிர்தத்தை அந்த பகுதியினர் பிடித்து பேடகம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமிதா இன்று அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து ராமாமிர்தத்தின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

 

The post கேரளாவில் இளம்பெண் எரித்துக் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: