கோடை மழை எதிரொலி சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கம்பம் : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட சுருளி அருவி தற்சமயம் அதிக நீர்வரத்துடன் உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுருளியருவி கம்பத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுருளி அருவியில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்களும் உள்ளதால் ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை வருடம் முழுவதும் சுருளி அருவியில் காணப்படும்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக சுருளி அருவிக்கு நீர் வரத்தாக உள்ள மேகமலை மற்றும் தூவானம் அணை ஈத்தக்காடு அரிசி பாறை ஆகிய பகுதிகளில் மழை இல்லாததால் சுருளி அருவியில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளித்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, தூவானம் அணை பகுதிகளிலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் நேற்று நீர்வரத்து மிகுதியாக காணப்பட்டது.

இருந்த போதும் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுருளி அருவியில் குளித்து வருகின்றனர்.

The post கோடை மழை எதிரொலி சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: