இந்த கடனை திருப்பி செலுத்தாததால் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை வசூலிப்பதற்காக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளும் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரான எனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை நீக்க வேண்டும். எனது சகோதரர் ராம்குமார் பெற்ற 3 கோடி ரூபாய் கடனுக்காக எனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே? என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், இது போன்று அவருக்கு உதவ முடியாது. பலரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார் என்று கூறினார். இதைடுத்து, விசாரணையை நீதிபதி ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அண்ணன் ராம்குமார் வாங்கிய ரூ.3 கோடி கடனுக்காக என்னுடைய ரூ.150 கோடி சொத்தை முடக்குவதா? உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு தரப்பு வாதம் appeared first on Dinakaran.