இதில் கடந்த 2009 ம் ஆண்டில் வீரவநல்லூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக 21.06.2011-ம் தேதி வீரவநல்லூரை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் சுப்பையா தாஸ்(38), பொன்னையா தாஸ் என்பவரின் மகன் சுரேஷ் (37), அருணாச்சலம் என்பவரின் மகன் சுரேஷ் (37), கொம்பன் என்பவரின் மகன் கொம்பையா (38) மற்றும் 17 நபர்கள் சேர்ந்து வீரவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் ரத்தினவேல் பாண்டியன் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக இறந்து போன ரத்தினவேல் பாண்டியன் மகன் வெள்ளத்துரை அளித்த புகாரின் அடிப்படையில் வீரவநல்லூர் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 21 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது கடந்த 12 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில், அவ்வழக்கின் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் துரிதப்படுத்தி சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விசாரணை முடித்து இன்று 26.03.2025ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் எதிரிகளான சுப்பையா, பொன்னையா தாஸ் என்பவரின் மகன் சுரேஷ், அருணாச்சலம் என்பவரின் மகன் சுரேஷ், கொம்பன் என்பவரின் மகன் கொம்பையா ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
வரிசையாக நடைபெற்ற ஐந்து கொலை வழக்குகளில் இதுவே தண்டனை பெற்ற முதல் வழக்காகும்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் மற்றும் வீரவநல்லூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2½ மாதங்களில் ஏற்கனவே நடைபெற்ற ஜாதிய கொலைகள், பழிக்கு பலியான கொலைகள் போன்ற முக்கிய கொலை வழக்குகள் மற்றும் வீரவநல்லூரில் ஏற்கனவே நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு வீரவநல்லூர் அருகே உப்புவாணிமுத்தூர் ஊரில் நடந்த 5 கொலை வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், பாளையஞ்செட்டிகுளத்தில் ஒரே சமுதாயத்தினர் இடையே நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோபால சமுத்திரம் பகுதியில் 2021 ம் ஆண்டு நடைபெற்ற ஜாதிய கொலை வழக்கையும் துரிதப்படுத்தி 3 நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் 2025 ஆம் வருடத்தில் மட்டும் இதுவரை 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 41 குற்றவாளிகளுக்கு (14 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட) ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருநெல்வேலி மாவட்ட வீரவநல்லூர் அருகே கொலை வழக்கில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த காவல்துறை..!! appeared first on Dinakaran.