சனிப் பெயர்ச்சி மார்ச் 29-ந் தேதி நிகழாது : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி : வரும் 29-ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. ஜோதிடத்தைப் பொருத்தவரை பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகையான பஞ்சாங்கங்களை ஜோதிடர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.இதில், வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பின்பற்றப்பட்டு வரும் பஞ்சாங்கமாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள சில விஷயங்கள் திருத்தியமைக்கப்பட்டு கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே 29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

இந்த நிலையில், மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 29-ம் தேதி சனி பெயர்ச்சி நிகழும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். பாரம்பரிய கணிப்பு முறைப்படி நடப்பு 2025-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது 2026-ம் ஆண்டுதான் நிகழும். இது தொடர்பான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சனிப் பெயர்ச்சி மார்ச் 29-ந் தேதி நிகழாது : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: