சென்னை: கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31/03/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/06/2025 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சட்டமன்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற்றிட வழிவகை செய்யப்படும் என அறிவித்ததன் அடிப்படையில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு (PTCS) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டைகளை பெறும் வசதி, முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 07.09.2023 அன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
பயனாளிகள், இத்திட்டத்தின் வாயிலாக எவ்வித சிரமுமின்றி தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கட்டணமில்லா பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற்று வருகின்றனர். மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் இணையதளம் வாயிலாக புதுப்பிக்க ஏதுவாகவும், மேலும் இவ்வசதியினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகளும் பயன் பெறும் வழியில், இதர ஆறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் (விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி) விரிவு படுத்த ஏதுவாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31/03/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/06/2025 வரை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The post கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.