மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜ எம்எல்ஏ: சமூக ஆர்வலர்கள் கண்டனம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 1 கோடி கையழுத்து பெறும் இயக்கத்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாஜவினர் தொடங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் பாஜ எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில், 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து, கோயிலுக்கு உள்ளே சென்று தலசயன பெருமாள், நிலமங்கை தாயாரை வழிபட்டனர். பின்னர், வெளியே வந்த எம்எல்ஏ காந்தி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தலசயன பெருமாள் கோயில் மண்டபத்தில் கடை வைத்துள்ள பெண்களிடம் கட்டாய கையெழுத்திட சொல்லி கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

இதனைதொடர்ந்து, பாஜ தொண்டர்கள் கோயிலுக்கு உள்ளே சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினர். இதனால், பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மாமல்லபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு சென்று, அலுவலகத்தில் இருந்த நாற்காலிகளை யாரிடமும் கேட்காமல் எடுத்து வந்து, சேரில் அமர்ந்து அவ்வழியாக சென்றவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினர். கோயிலுக்கு சாமி தரிசனத்துக்கு சென்ற பக்தர்களை மறித்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து வாங்கிய பாஜ எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் பாஜ கட்சியினருக்கு எதிராக சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜ எம்எல்ஏ: சமூக ஆர்வலர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: