சிறையில் தன்னை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய பிலால் மாலிக் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறையில் தன்னை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விசாரணைக் கைதி பிலால் மாலிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வேலூர் சிறைத்துறை டிஐஜியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், செல்போன் குறித்து ஆய்வு செய்ய சிறை அதிகாரிகள் முயன்ற போது அவர்களை அனுமதிக்கவில்லை எனவும் இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறைக்காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதையடுத்து அந்த சூழலை தவிர்க்க சிறை அதிகாரிகள் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தை பயன்படுத்தினர் என்றார். இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி, சோதனையின் போது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வேலூர் சிறைத்துறை டிஐஜியின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

The post சிறையில் தன்னை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய பிலால் மாலிக் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: