பங்கு சந்தையில் அதிக பணம் கிடைப்பதாக கூறி புதுவை நபரிடம் ரூ.36.91 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, மார்ச் 10: பங்கு சந்தையில் அதிக பணம் கிடைப்பதாக கூறி புதுவை நபரிடம் ரூ.36.91 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண். இவரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துள்ளார். அந்த குரூப்பில் பங்கு சந்தையில் முதலீடு செய்து, எவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது குரூப்பில் இருந்த மற்றவர்கள், பணம் சம்பாதித்தாக ஆதாரத்துடன் பதிவு செய்தனர்.இதனை நம்பிய அருண், குரூப்பில் இருந்த லிங்க் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்ய கணக்கு தொடங்கி, பின்னர் பல்வேறு தவணைகளில் ரூ.36.91 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாக கணக்கில் காண்பித்துள்ளது. அதை அருண் எடுக்க முயன்றபோது, அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

புதுவை உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி கலைவாணன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது வெளிநாடு செல்வதற்கு விசா வேண்டும், இதற்கு டெபாசிட் கட்டணமாக செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறியுள்ளார். இதையடுத்து கலைவாணன் மர்ம நபருக்கு ரூ.1.45 லட்சத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.

புதுவை அருகே பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேகா என்பவர் ரூ.20 ஆயிரம், மதகடிப்பேட் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் ரூ.22 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய 4 பேரும் மொத்தமாக ரூ.38.78 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பங்கு சந்தையில் அதிக பணம் கிடைப்பதாக கூறி புதுவை நபரிடம் ரூ.36.91 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: