தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காஷ்மீரில் மாயமான 3 பேர் சடலமாக மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மாயமான 3 பேர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பிலாவர் நகரில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த புதனன்று சென்ற யோகேஷ் சிங், தர்ஷன் சிங் மற்றும் வருண் சிங் (மைனர்) ஆகியோர் மாயமானார்கள். அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு பின் உறவினர் ஒருவர் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, திருமணம் முடிந்து வரும் வழியில் காட்டுப்பகுதியில் மூன்று பேரும் வழிதவறி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மாயமான மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் லோஹாய் மல்ஹார் அருகே நீர்நிலையில் டிரோன் மூலமாக தேடியபோது அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

யோகேஷ் மற்றும் தர்ஷன் மர்ஹூனில் வசிப்பவர்கள். வருண் தெஹோட்டாவை சேர்ந்தவர். இந்த பகுதியில் தீவிரவாதிகள் அதிகம் இருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த மாதம் இதே பகுதியில் தீவிரவாத தாக்குதலில் இரண்டு பேர் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே உயிரிழந்த மூன்று பேரும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

The post தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காஷ்மீரில் மாயமான 3 பேர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: