தஞ்சாவூரில் முதல்வர் மருந்தக சேமிப்புக்கிடங்கில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: மருந்தக தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியம்

தஞ்சாவூர், பிப்.27: தஞ்சாவூர் மாவட்டம் காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் முதல்வர் மருந்தகத்திற்கான மருந்துகள் சேமிப்புக் கிடங்கு மற்றும் மருந்தகத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் தெரிவித்ததாவது:
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 24ம் தேதி அன்று 1000 முதல்வர் மருத்தகங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி சிறப்பங்காடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் முதல்வர் மருந்தகத்திற்கான மருந்துகள் சேமிப்புக் கிடங்கு மற்றும் மருந்தகமும், கலைஞர் நகரில் உள்ள தனிநபர் தொழில்முனைவோர் சார்பில் நடத்தப்படும் தனியார் முதல்வர் மருந்தகமும் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டத்தில் 8 மருந்தகமும். பூதலூர் வட்டத்தில் 1 மருந்தகமும், திருவையாறு வட்டத்தில் 1 மருந்தகமும், கும்பகோணம் வட்டத்தில் 3 மருந்தகமும், பாபநாசம் வட்டத்தில் 3 மருந்தகமும். திருவிடைமருதூர் வட்டத்தில் 4 மருந்தகமும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 7 மருந்தகமும், மதுக்கூர் வட்டத்தில் 2 மருந்தகமும், பேராவூரணி வட்டத்தில் 3 மருந்தகமும் ஆக மொத்தம் 32 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.பி.பார்ம் மற்றும் டி.பார்ம் படித்தவர்களிடமிருந்து நேரடியாகவும் கூட்டுறவுத்துறை மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொழில் முனைவோர்களாக நேரடியாக முதல்வர் மருந்தகம் அமைக்க மானியமாக ரூ. 3 லட்சத்தை தமிழக அரசு சார்பில் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்தாகவும் வழங்கப்பட உள்ளது. ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் நியூட்ராசூட்டிகல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் ஆகியவை குறைவான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும்.

முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான மருந்தக உரிமம் பெறுதல், உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருந்து கிடங்கு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 32 முதல்வர் மருந்தகங்களுக்கு மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மருந்து விநியோகம் செய்யப்படவுள்ள வாகனம் மற்றும் பண்டகசாலை வளாகத்தில் பண்டகசாலையால் முதல்வர் மருந்தகத்தினை இன்று ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் மருந்தகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களுடம் மருந்தின் இருப்பு மற்றும் விலையின் விவரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் முதல்வர் மருந்தக சேமிப்புக்கிடங்கில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: மருந்தக தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியம் appeared first on Dinakaran.

Related Stories: