வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

டெல்லி: வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது.

தென்மேற்கு பருவமழை கடந்தாண்டு அக்.15ம் தேதி இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்தது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்.15-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்து இன்றுடன் விலகியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் 100 நாட்களுக்கும் அதிகமான காலமாக நீடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தென்னிந்தியாவில் மழை ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவியது. இதனால் வடகிழக்கு தென்னிந்திய பகுதிகளில் இருந்து முற்றிலும் விடைபெற்றது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: