தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் விபத்துகுள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு!

விழுப்புரம்: திருச்சியிலிருந்து தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துகுள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுக்கட்டையில் கார் மோதிய விபத்தில் திருச்சியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் திருச்சி தெற்கு மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் கலை என்பவர் என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே சென்னையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால், விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாநாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

 

The post தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் விபத்துகுள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: