கொடைக்கானலில் ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே ஒற்றை யானை முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், பள்ளங்கி கோம்பை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில், கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளங்கி கோம்பை கிராமத்தில் ஒற்றை யானை முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் ஒற்றை யானை அப்பகுதியிலே முகாமிட்டிருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஒலி எழுப்பி ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இப்பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

The post கொடைக்கானலில் ஒற்றை யானையால் பயிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: