பணம் கொடுக்கல்,வாங்கல் பிரச்னையில் செல்போன் கடைக்காரரை காரில் கடத்தி தாக்குதல்

 

புதுச்சேரி, அக். 26: புதுச்சேரி மூலக்குளம் வில்லியனூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தில்லை கணேஷ் (35). இவரது வீட்டின் வெளியே செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் ரெட்டிச்சாவடியை சேர்ந்த சிவகுமாருக்கும், தில்லை கணேஷூக்கும் பணம் கொடுக்கல்,வாங்கல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இதனிடையில் கடந்த 10ம் தேதி தில்லை கணேஷ் கடையில் ேவலை செய்து கொண்டிருந்தபோது, காரில் வந்த சிவகுமார், விக்கிரவாண்டியை சேர்ந்த ரவுடி கைப்புள்ள(எ) ராஜா உள்பட 4 பேர் தில்லை கணேஷை அடித்து இழுத்து சென்று காரில் ஏற்றினர்.

பின்னர் அவரை காருக்குள் வைத்து அடித்து, உதைத்தபடியே ஊரை சுற்றி வந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அவரை மீண்டும் கடையில் விட்டுவிட்டு பணத்தை தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். தாக்குதலில் காயமடைந்த தில்லை கணேஷ் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பணம் கொடுக்கல்,வாங்கல் பிரச்னையில் செல்போன் கடைக்காரரை காரில் கடத்தி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: