கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எடப்பாடியின் நெருங்கிய நண்பர் நவ.5ல் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியின் நெருங்கிய நண்பரும், அதிமுக மாநில நிர்வாகியுமான சஜீவன் நவ.5ல் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை கும்பலை சேர்ந்த சேலம் ஆத்தூர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, போயஸ் கார்டன் கோயில் பூசாரி, புதுச்சேரி தனியார் வங்கி மேலாளர் உட்பட இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், அதிமுக மாநில வர்த்தக அணி தலைவரான சஜீவன் என்பவரை நவம்பர் 5ம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்க சிபிசிஐடி போலீசார் கோவையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சஜீவனின் மனைவியிடம் சம்மன் வழங்கிவிட்டு சிபிசிஐடி போலீசார் சென்றனர்.

மர வியாபாரியான சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். எனவே, அவரிடம் கொடநாடு வழக்கு மற்றும் எஸ்டேட் தொடர்பான விவரங்களை பெற போலீசார் முடிவு செய்துள்ளனர். இவரிடம் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் மீது கூடலூரில் வன விலங்குகளை வேட்டையாடிய வழக்கு நிலுவையில் உள்ளதும், இவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எடப்பாடியின் நெருங்கிய நண்பர் நவ.5ல் ஆஜராக சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: