மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் :திமுக சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!!

சென்னை : ECR சாலையில் மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் அமைக்க திமுக சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் பேசிய போது, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் உலகளவில் உள்ள கூட்ட அரங்கங்களில் மகத்தான BEST IN CLASS Convention Center-ஆக இது அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த அரங்கமானது தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான 5.4 ஹெக்டேர் நிலத்தில் 2.54 ஏக்கரில் வணிக ரீதியிலான கட்டடமாக அமைகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வடகடம்பாடி, பெருமாளேரி கிராமத்தில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் 2.54 ஹெக்டர் பரப்பில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் அமைக்கிறது தி.மு.க. அறக்கட்டளை. கலை, இலக்கியம், கலாசார நிகழ்வுகள், தி.மு.க. அரசியல் நிகழ்வுகளும் மையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிக் கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் திமுக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கோரி திமுக அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் டி.ஆர்.பாலு விண்ணப்பம் செய்துள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த உடன் நவீனமயமாக்கும் பணியானது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மகாபலிபுரம் அருகே கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் :திமுக சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்!! appeared first on Dinakaran.

Related Stories: