ராஜபாளையம் அருகே வாழை, தென்னங்கன்றுகளை ‘கதம்’ செய்யும் காட்டுயானைகள்: விவசாயிகள் கவலை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, விளைநிலங்களில் புகும் காட்டு யானைகள் வாழைகள், தென்னங்கன்றுகளை ஒடித்து நாசம் செய்வதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மா, பலா, வாழை, தென்னந்தோப்புகள் உள்ளன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைக் கூட்டங்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னங்கன்றுகளை ஒடித்து சேதப்படுத்தி வருகின்றன. யானைகளை விரட்ட விவசாயிகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டும் பலனில்லை. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக விளைநிலங்களில் புகுந்த யானைகள் வாழை, தென்னை போன்ற பலன் தரும் பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி வெங்கடேசன் கூறுகையில், ‘வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வரும் காட்டுயானைகள் விளைநிலங்களில் புகுந்து வாழை, தென்னை, மா ஆகிய மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வருகின்றன. கடந்த 3 நாட்களில் 200 வாழைகள், 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஒடித்து நாசம் செய்துள்ளன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post ராஜபாளையம் அருகே வாழை, தென்னங்கன்றுகளை ‘கதம்’ செய்யும் காட்டுயானைகள்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: