அதிமுக தானாகவே அழிந்துவிடும்; எடப்பாடியுடன் கூட்டு சேர யாரும் தயாராக இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. தமிழ்தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் இன்று அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

தமிழ்நாடு-திராவிடத்தை தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. யார் கட்சி ஆரம்பித்தாலும் திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும், ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அதிமுகவை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை அதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக தானாகவே அழிந்துவிடும்; எடப்பாடியுடன் கூட்டு சேர யாரும் தயாராக இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: