கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 54 பேர் பிரான்சுக்கு கல்வி சுற்றுலா

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 ஆசிரியர்கள் வருகிற 23ம் தேதி பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. 2023ம் ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருதிற்கு முதலில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற எம்.சி.க்யூ தேர்வில் (மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்ஸ் – தெரிவு வினாக்கள்) 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

5 கட்டங்களாக நடைபெற்ற 3ம் கட்ட தேர்வின் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் நுட்பங்கள், பேச்சாற்றல், வகுப்பறை மேலாண்மை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்மூலம், குறைந்தபட்சம் 75% மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றும், விருதும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் வருகிற 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

The post கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 54 பேர் பிரான்சுக்கு கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: