விவசாயி மீது மோதி வாய்க்காலில் பாய்ந்த கார்

 

ரெட்டிச்சாவடி, அக் 14: புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (31). இவர் குழந்தை உள்பட உறவினர்கள் 6 பேருடன் கடலூர் நோக்கி விழுப்புரம்-நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை அருகே வந்தபோது முன் பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தை திடீரென்று காரின் ஸ்டீயரிங்கை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி சங்கரன் (57) மீது மோதி, அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சங்கரன் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார். மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சங்கரன் மற்றும் காரில் இருந்தவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த சங்கரனை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான கால்வாயில் கவிழ்ந்திருந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டு சேதம் அடைந்த மோட்டார் சைக்கிளையும் காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விவசாயி மீது மோதி வாய்க்காலில் பாய்ந்த கார் appeared first on Dinakaran.

Related Stories: