ஓடும் ரயிலில் சாகசம்: மாணவன் படுகாயம்: வீடியோ வைரல்

சென்னை: ஓடும் ரயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவன், மின் கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (16). இவர், பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார்.

ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சென்றபோது, ரயில் பெட்டியின் நுழைவாயிலில் கம்பியை பிடித்துக்கொண்டு, வெளியில் தொங்கியபடி அபிலாஷ் சாகசம் செய்துள்ளார். அப்போது மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உடன் சென்ற நண்பர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

பின்னர், ஸ்டான்லி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அபிலாஷ் ரயிலில் சாகசத்தில் ஈடுபடுவதும் பின், மின் கம்பத்தில் மோதி தூக்கி எறியப்படுவதை உடன் சென்ற நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

The post ஓடும் ரயிலில் சாகசம்: மாணவன் படுகாயம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: