இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில் அறிமுகம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

மதுரை: பாஜ கட்சி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக ரயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். ரயில்வே துறை 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரிக்கின்றனர். ஆனால், மொத்த ரயில்வேயும் வேலை செய்யவில்லை என ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ரயில் விபத்து குறித்து நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. என்ஐஏ விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சரவெடி தடையை நீக்க நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரியில், தனியார் பட்டாசு ஆலையில், தொழிலாளர்களுடன் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சரவெடி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

The post இன்னும் ஒரு வருடத்தில் புல்லட் ரயில் அறிமுகம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: