நம்பியூரில் அரசு பள்ளி அருகே தனியார் மதுபான கூடத்தை அனுமதிக்க கூடாது; குறைதீர் கூட்டத்தில் மனு

 

ஈரோடு, அக். 8: நம்பியூரில் அரசு பள்ளி அருகே தனியார் மதுபான கூடம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் எம்.சி.சண்முகம், நம்பியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன் மற்றும் சட்ட உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல நூறு மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் அப்பள்ளிக்கு அருகே, சுமார் 100 மீட்டர் தூரத்துக்குள் நம்பியூர் – எலத்தூர் சாலையில், தனியார் மதுபான கூடம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அந்த இடத்தில் தனியார் மதுபான கூடம் அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

The post நம்பியூரில் அரசு பள்ளி அருகே தனியார் மதுபான கூடத்தை அனுமதிக்க கூடாது; குறைதீர் கூட்டத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: