சாலையை கடக்க முயன்றபோது பைக் மீது அரசு பேருந்து மோதி தாய், மகன் பரிதாப பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே சோகம்

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றபோது, பைக் மீது அரசு பேருந்து வேகமாக மோதியதில் தாய், மகன் இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இவர் மகேந்திரா சிட்டியில் உள்ள வாகனங்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆலன் (15) என்ற மகன் உள்ளார்.

இவர் அஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்துவதற்காக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தை ஆலன் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், மின் கட்டணம் செலுத்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, திருச்சி – சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஒரகடம் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து சென்னை அடையாறு நோக்கி சென்ற அரசு பேருந்து சாலையை கடக்க இருந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜெயஸ்ரீ, ஆலன் ஆகிய இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அப்போது பணியில் இருந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் இருவரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கபெருமாள்கோவில் பகுதியில் விபத்தில் தாய், மகன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சாலையை கடக்க முயன்றபோது பைக் மீது அரசு பேருந்து மோதி தாய், மகன் பரிதாப பலி: சிங்கபெருமாள் கோயில் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: