மெரினா ஏர் ஷோவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கோட்டை விட்டது ஏன்?: தண்ணீர் வசதி கூட செய்து கொடுக்கவில்லை

சென்னை: சென்னை மெரினா ஏர் ஷோவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கோட்டை விட்டது ஏன்? மக்களுக்கு தண்ணீர் வசதி கூட செய்து தரவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போர் விமான சாகச நிகழ்ச்சியின்போது 15 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதில் 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் வரும். அவர்கள் தான் அங்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஏர் ஷோ நடைபெறுகிறது என்பது முன்னரே அத்தனை பேருக்கும் தெரியும். எத்தனை லட்சம் பேர் வருவார்கள் என்பதை முன்னரே யுகித்து வசதிகளை சென்னை மாநகராட்சி செய்து கொடுத்து இருக்க வேண்டுமா, வேண்டாமா?. ஆனால், இந்த நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிகாரிகளுடன் எத்தனை முறை ஆலோசனை நடத்தினார் என்பதே கேள்விக்குறியாக தான் உள்ளது.

சென்னை மாநகராட்சியிலேயே சுகாதாரத்துறை உள்ளது. மேலும் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை நடத்தி முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கி சென்னை மாநகராட்சி மக்களுக்கு தேவையான தண்ணீர் வசதியை மெரினாவில் ஏற்படுத்தி கொடுத்து இருக்கலாம். மினரல் வாட்டர் தான் கொடுக்க முடியாது என்றால், அதிகமான இடங்களில் சின்டக்ஸ் டேங் வைத்து அதில் தண்ணீரை நிரப்பி வந்தவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். தண்ணீர் வசதி இருந்து இருந்தால் ஒரு அளவுக்கு மக்களின் தாகம் தணிந்து இருக்கும். நீர் சத்து இழப்பு என்பது இருந்திருக்காது. ஒரு தண்ணீர் வசதியை கூட சென்னை மாநகராட்சிக்கு மேயராக இருக்கும் பிரியா செய்து கொடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சிறுநீர் உள்ளிட்டவை கழிப்பதற்கு கடும் அவதிக்குள்ளாகினர். மொத்தத்தில் இந்த 5 பேர் உயிழப்புக்கு சென்னை மாநகராட்சியும், அதற்கு மேயராக உள்ள பிரியாவும் தான் பொறுப்பேற்க வேண்டும். மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கே இந்த இறப்புக்கு காரணமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மெரினா ஏர் ஷோவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கோட்டை விட்டது ஏன்?: தண்ணீர் வசதி கூட செய்து கொடுக்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: