தூத்துக்குடி துறைமுக தேர்வு.. ஒருவர் கூட தேர்ச்சி இல்லை என்பதா?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!!

சென்னை: தூத்துக்குடி துறைமுக ஆணையம் நடத்திய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று தூத்துக்குடி துறைமுக ஆணையம் அறிவித்து இருந்தது. தமிழர்களை புறக்கணித்துவிட்டு வடமாநிலத்தவரை தூத்துக்குடி துறைமுகத்தில் நியமிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி துறைமுக ஆணையம் நடத்திய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லையா? என சு.வேங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது;

வ. உ. சி துறைமுக ஆணையம்:
ஒருவர் கூட தேர்ச்சி இல்லையா?

முதல் நிலை அதிகாரிகள் நியமனத் தேர்வுகளில் – எழுத்து தேர்வு, நேர்காணல்கள் முடிந்த பின்னர் – ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் அவை. இத்தகைய அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதுடன் தேர்வு முறைமை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளன.

இதுகுறித்து துறைமுக இணை அமைச்சர் சாந்தனு தாகூர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதுகுறித்து மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி துறைமுக தேர்வு.. ஒருவர் கூட தேர்ச்சி இல்லை என்பதா?: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!! appeared first on Dinakaran.

Related Stories: