விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி பலி ஆரணி அருகே சோகம் நெல்வயலில் களையெடுக்க பாட்டியுடன் சென்றபோது

ஆரணி, அக்.1: ஆரணி அருகே நெல்வயலில் களையெடுக்க பாட்டியுடன் சென்றபோது விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் அடுத்த மன்சுராபாத் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(29), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு மகன் தர்ஷன்(4), ஹாசினி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளனர். செல்வராஜ் அவரது மனைவி ஆனந்தியுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்திற்கு சென்று, அங்கு கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதனால், செல்வராஜ் தனது குழந்தையை மாமியார் வீடான, ஆரணி அடுத்த மோட்டூர் கிராமத்தில் விட்டுவிட்டு, மகன் தர்ஷனை மட்டும் தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். ஆனந்தியின் தந்தை ஏழுமலை அவரது மனைவி லட்சுமி இருவரும் அதேபகுதியில் உள்ள நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் நிலையில் பேத்தி ஹாசினியை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், லட்சுமி நேற்று மதியம் தனது பேத்தி ஹாசினியை நிலத்திற்கு அழைத்து சென்று அருகே அமர வைத்துவிட்டு நெற்பயிரில் களை எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை திடீரென காணவில்லை. இதனால், லட்சுமி, அவரது கணவர் இவரும் சேர்ந்து குழந்தையை அக்கம், பக்கத்திலும் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், விவசாய நிலத்தின் அருகில் உள்ள செய்யாற்றுப்படுகை ஆற்றில் இறங்கி பார்த்தபோது, ஆற்றில் ேதங்கியிருந்த தண்ணீரில் குழந்தை ஹாசினி இறந்து மிதந்து கிடப்பதை கண்டு அதிச்சியடைந்தனர். தண்ணீரில் விளையாடியபோது குழந்தை மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை ஆற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி பலி ஆரணி அருகே சோகம் நெல்வயலில் களையெடுக்க பாட்டியுடன் சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: