மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

பெங்களூரு : மைசூரு மாநகர வளர்ச்சி குழும நில முறைகேடு புகாரில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்கு நடத்த அனுமதி வழங்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யகோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடந்த மாதம் 16ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில் தன்மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முதல்வர் சித்தராமையா கடந்த மாதம் 19ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. நீதிபதி நாக பிரசன்னா வழங்கிய தீர்ப்பில், “தனிநபர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எனவே மூடா விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அளித்த ஒப்புதலை ரத்து செய்ய கோரிய சித்தராமையா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!! appeared first on Dinakaran.

Related Stories: