உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்

*போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

உளுந்தூர்பேட்டை : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அய்யனார் கோயில் தெருவில் வசித்து வந்தவர் ரவி மகன் தமிழ்ச்செல்வன் (25). கார் டிரைவரான இவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு புதியதாக கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நேற்று தனது மனைவி சரண்யா (21) மற்றும் பிள்ளைகள் விக்னேஸ்வரன் (13), ஷிவானி (4), உறவினர்கள் உதயசூரியன் (28), திலகவதி (23) ஆகியோருடன் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த கார் காட்டு நெமிலி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன் காரை ஓட்டிச் சென்ற தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் சென்ற அவரது மனைவி சரண்யா உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதே போல் லாரியை ஓட்டிச் சென்ற பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னன் (37) மற்றும் அந்த லாரியில் சென்ற பெண் தொழிலாளர்கள் வீரம்மாள் (45), முத்துலட்சுமி (52), மகாலட்சுமி (32), உஷா (30), மணி (27) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இவ்விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி ஒருவர் பலி, 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: