ராகுல்காந்தி குறித்து அவதூறு பேச்சு என்னுடன் எச்.ராஜா நேரில் விவாதிக்க தயாரா? செல்வப்பெருந்தகை சவால்

சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து பாஜ தலைவர் எச்.ராஜா அவதூறாக பேசியதை கண்டித்து, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு ஏற்பாட்டில் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், அடையாறு துரை, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்டிஐ பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, அகரம் கோபி, சூளை ராஜேந்திரன், கொளத்தூர் கோபால், மா.வே.மலையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அவர்களுடைய நோக்கம் அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்க வேண்டும். இந்த நாட்டை கலவர பூமியாக்க வேண்டும் என நினைக்கின்றனர். எச்.ராஜா என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்.

நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தில் வந்த ராகுல்காந்தியை தேச துரோகி என தவறாக விமர்சிக்கிறார். எச்.ராஜாவுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். என்னுடன் ஒரு மணி நேரம் அரசியல் பேச எச்.ராஜா தயாரா? அப்படி பேசினால் அவரது உண்மை முகம் தெரிந்து விடும். நாளை அனைத்து மாவட்டங்களிலும் எச்.ராஜா குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ராகுல்காந்தி குறித்து அவதூறு பேச்சு என்னுடன் எச்.ராஜா நேரில் விவாதிக்க தயாரா? செல்வப்பெருந்தகை சவால் appeared first on Dinakaran.

Related Stories: