தமிழ்நாடு முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் கல்யாண ராணிக்கு உதவிய பெண் புரோக்கர் கைது: கூட்டு சேர்ந்து பலரது வாழ்க்கையை சீரழித்தது அம்பலம்

தாராபுரம்: கல்யாண ராணி சத்யாவுக்கு உதவிய புரோக்கர் தமிழ்ச்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று கரூரில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (34) என்பவர் அறிமுகமாகி காதலித்தனர். இதற்கிடையே சத்யாவின் உறவினர் என கூறிக்கொண்டு தமிழ்ச்செல்வி என்பவரும் மகேஷ் அரவிந்திடம் அறிமுகமானார்.

அதன்பின்னர் தமிழ்செல்வியும், சத்யாவும் சேர்ந்து மகேஷ் அரவிந்திடம் பல்வேறு பொய்யான காரணங்களை கூறி பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி பழனி தாலுகா தொப்பம்பட்டி அருகே பூசாரி கவுண்டன் வலசு கிராமத்தில் மகேஷ் அரவிந்துக்கும் சத்யாவுக்கும் தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்துள்ளார். இதன் பின்னர் சத்யாவுக்கு உறவினர்கள் தாலிக்கொடி உள்பட 12 பவுன் நகைகளை கொடுத்துள்ளனர். மகேஷ் அரவிந்த் வீட்டில் இருந்து சத்யா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்து சத்யாவின் ஆதார் கார்டை பார்த்தபோது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. செல்போன் பதிவுகளை பார்த்தபோது அதில் ஆண்கள் சிலருடன் சத்யா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்தன. இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சத்யாவை மகேஷ் அரவிந்த், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தந்திரமாக அழைத்து வந்தார். அவரை போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் ஈரோடு, சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார், டாக்டர்கள், ஏற்கனவே திருமணம் ஆனவர்கள், மணப்பெண் தேடும் இளைஞர்கள் என 53க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி சத்யா திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன்பின்னர் சத்யாவிற்கு மூளையாகவும், புரோக்கராகவும் செயல்பட்ட தமிழ்ச்செல்வியை போலீசார் தேடி வந்தனர்.

கடந்த 3 மாதமாக புதுச்சேரி, கேரளா, கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு போன்ற நகரங்களில் இந்த தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில் சத்யா கரூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நேற்று அதிகாலை தமிழ்ச்செல்வியை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப்பின் அவரை உடுமலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை சிறையில் இருந்த சத்யா ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் கல்யாண ராணிக்கு உதவிய பெண் புரோக்கர் கைது: கூட்டு சேர்ந்து பலரது வாழ்க்கையை சீரழித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: