திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்; தொலைபேசியில் புகார் அளிக்கலாம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

கோவில்பட்டி: தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணனின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள டிஜிட்டல் நூலகம், காட்சிப்படுத்தப்பட்டிருந்த கி.ரா.வின் புத்தகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

செய்தித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிரந்தர பணியாளர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா அளவில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு உள்ளேன். உரிய நேரத்தில் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவுகள் எடுக்கப்படும்.

திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக தனியாக தொலைபேசி எண் உள்ளது. எந்த நேரத்திலும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக வங்கக்கடலில் விதிமுறைக்கு உட்பட்டுத்தான் பேனா சின்னம் அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

The post திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்; தொலைபேசியில் புகார் அளிக்கலாம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: