செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர எப்போது அனுமதி கிடைக்கும்? அரசு தரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் வழக்கு தொடர அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்து எத்தனை அவகாசம் கேட்பீர்கள் என்று அரசு வழக்கறிஞருக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று வேலை தராமலிருந்ததாக புகார் கூறப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத் துறையிடம் இருந்து கிடைக்கவில்லை. எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவது ஏற்க முடியாது என்று தெரிவித்து வரும் 18ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார். அன்றைய தினம் வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர எப்போது அனுமதி கிடைக்கும்? அரசு தரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: