ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த நினைக்கிறது கொள்கைகளை விட்டுக் கொடுத்து நிதி பெறவேண்டிய தேவை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

கொடைக்கானல்: கொள்கைகளை விட்டு கொடுத்து, ஒன்றிய அரசிடம் நிதி பெற தேவையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரு மொழி கல்விக்கொள்கையை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தி வருகிறது. மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒருங்கிணைந்த கல்வியை தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்த கல்வியை ஏற்கனவே தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது.

பல்வேறுவிதமான திட்டங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தரப்படும் என்று ஒன்றிய அரசு கூறி வருகிறது. கொள்கைகளை விட்டுக் கொடுத்து நிதி பெற தேவையில்லை. ஒன்றிய அரசு பல்வேறுவிதமான முரண்பட்ட கல்வியை புகுத்த முனைகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து குலக்கல்வி முறையை கொண்டு வர நினைக்கிறது. தமிழ்நாடு அரசு கல்வித்துறை, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.2,150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசு பணம் தராவிட்டாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைகளில் போராடி வெற்றி பெற்று வருகிறது.

கல்வி நிதியில் யார் அரசியல் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். நாம் புதிதாக பணம் கேட்கவில்லை, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நடைமுறையில் உள்ள பணத்தை தான் கேட்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் படிக்க வைத்து விடுவார்களோ என்ற எண்ணம் ஒன்றிய அரசுக்கு இருப்பதாக தோன்றுகிறது. மகாவிஷ்ணு விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் போக்கு வேறு விதமாக இருப்பதாக தோன்றுகிறது. இவ்வாறு கூறினார்.

 

The post ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த நினைக்கிறது கொள்கைகளை விட்டுக் கொடுத்து நிதி பெறவேண்டிய தேவை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: