சென்னையில் நான்கு இடங்களில் புதிதாக ‘சிறு கடைகள் வளாகம்’ அமைக்க திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்


சென்னை: சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் சிறு கடைகள் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் சிறிய கடைகள் அடங்கிய நீண்ட தெருக்கள் அதிகமாகி வருகின்றன. இவற்றில் பல உரிய அனுமதி பெற்றும், சில அனுமதி பெறாமலும் இயங்கி வருகின்றன. இருப்பினும் இதுபோன்ற சிறிய கடை தெருக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர். எனவே இத்தகைய கடை தெருக்களை முறைப்படுத்தி போதிய வசதிகளை செய்து கொடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக 4 இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

அவை, வட சென்னையில் மகாகவி பாரதி நகரில் உள்ள வெஸ்ட் அவென்யூ ரோடு, எழும்பூரில் உள்ள பாந்தியன் லேன், அம்பத்தூரில் உள்ள பார்க் ரோடு, பெசன்ட் நகரில் உள்ள செகன்ட் அவென்யூ ஆகியவை ஆகும். இந்த தெருக்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளி, உணவகங்கள், அழகு சாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கடைகளை கட்டமைக்க உள்ளனர். ஒவ்வொரு கடைக்கும் 5 அடி இடைவெளி இருக்கும். இவற்றுக்கு முறையாக உரிமம் வழங்கப்படும். உணவு பாதுகாப்பு உரிமமும் அளிக்கப்படும். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இதில் பெரும்பாலும் தெருக்களில் இருக்கும் விற்பனையாளர்களுக்கு இடமளித்துள்ளோம். அனைத்து விற்பனையாளர்களுக்கும் உரிமம் வழங்கப்படும். ஒரு இடத்தில் ஒதுக்கப்பட்ட விற்பனை மண்டல எண்களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கடைகள் அமைக்க மஞ்சள் நிறம் பூசி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. பாந்தியன் லேனில், திரைச்சீலைகள், பெட்ஷீட்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைப் பொருட்கள் விற்க 50 கடைகள் ஒதுக்கப்படுகின்றன. அடையாறு இரண்டாவது அவென்யூவில் பல்வேறு வகையான ஸ்டால்கள் அனுமதிக்கப்படும். இங்கு 45 கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சாப்பாட்டுக் கடைகள், ஆபரணக் கடைகள், சாலையோர சந்தைகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவை உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத விற்பனையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நாங்கள் எச்சரித்துள்ளோம். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடைபாதைகளின் ஒரு பக்கம் விற்பனைக்கு அனுமதிக்கப்படும், எதிர்புறம் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படும். இதில் தற்போது கடை வைத்திருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும் சில்லறை வர்த்தக தெருக்கள் என்பதை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். வர்த்தக தெருக்களை தாண்டி கடை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகளுக்கு தனியாக கழிவறைகள் கட்டி தரப்படும். பிரதம மந்திரியின் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்கு இலவச உணவு தள்ளுவண்டிகள் வழங்கப்படும். இத்தகைய நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்படும் நிலையில், மறுபுறம் கடை தெருக்கள் அல்லாத பகுதிகள் அனைத்தும் முறைபடுத்தப்படும். அங்கு செயல்பட்டு வரும் கடைகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளப்படும்.

எங்களிடம் சுமார் 400 வண்டிகள் பயன்படுத்த தயாராக உள்ளன. தற்போது சிறிய கடை தெருக்களில் கடைகள் வைத்திருக்கும் பெரும்பாலானோர் அதிகப்படியான வாடகை கொடுக்கும் நிலை காணப்படுகிறது. இவை முறைப்படுத்தப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு கட்டுபடியாகக் கூடிய வாடகையில் செயல்படும் வகையில் வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னையில் நான்கு இடங்களில் புதிதாக ‘சிறு கடைகள் வளாகம்’ அமைக்க திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: