நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சாலை ஓரங்களில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான மரங்கள், தாவரங்கள் ஆகியன உள்ளன. இவைகளில் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் மரங்களில் பல வண்ண பூக்கள் பூப்பது வழக்கம். இவைகள் எந்நேரமும் பூக்காமல் சில காலங்களில் மட்டும் பூப்பது வழக்கமாக கொண்டுள்ளன.

இதில், நீலகிரி மாவட்டத்தில் பிளேம் ஆப் தி பாரஸ்ட், ஜெகரண்டா, சேவல் கொண்டை, செர்ரி மற்றும் சீகை மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சீகை மரங்களில் மஞ்சள் நிற மலர்கள் பூத்துள்ளன. பொதுவாக இந்த மரங்கள் சாலையோரங்களில் அதிக அளவு காணப்படும்.

மேலும், வனங்களிலும் அதிக அளவு காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் இந்த மரங்கள் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரங்கள் ஊட்டியில் இருந்து பைக்காரா செல்லும் சாலை ஓரங்களிலும், மஞ்சூர் செல்லும் சாலையோரங்களிலும் அதிகளவு காணப்படுகிறது. இதில், தற்போது மஞ்சள் நிற மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் அவைகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள் appeared first on Dinakaran.

Related Stories: