பெண் டாக்டர் கொலை விவகாரம் போராட்டத்தின் பின்னால் பாஜவின் சதி இருக்கிறது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பெண் டாக்டர் கொலை விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு பின்னால் பாஜவின் சதி இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து, ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிர்வாக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த சம்பவத்தில் விசாரணை உட்பட அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது. கொலையான பெண் டாக்டரின் பெற்றோரை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.

அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ள நான் நிர்பந்தித்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இது முழுக்க பொய். ஆதாரமில்லை. இதன் பின்னால் சதி உள்ளது. இந்த போராட்டத்தை தூண்டி விடப்பட்டதன் பின்னணியில் பாஜவின் சதியும், இடதுசாரிகளின் சதியும் உள்ளது. வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிலர் நினைத்தார்கள். இந்தியாவும் வங்கதேசமும் வேறு வேறு என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் எப்போதும் உங்களை வரவேற்கிறேன். விரைவில் துர்கா பூஜை வருகிறது. எனவே திருவிழாக்களை கொண்டாடும் மனநிலைக்கு திரும்புங்கள். இவ்வாறு மம்தா கூறினார்.

 

The post பெண் டாக்டர் கொலை விவகாரம் போராட்டத்தின் பின்னால் பாஜவின் சதி இருக்கிறது: மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: