திருமணம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு அடிக்கல்: எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் கிராம மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து திருமணம் ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தேசிங்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயஸ்ரீ லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா வீரன் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சாக்ரடீஸ், ஒன்றிய பொருளாளர் சுகுமார், மாவட்ட பிரதிநிதி கந்தன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரெகானா பேகம், ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் பாலாஜி, துணைத் தலைவர் நிவேதா பூவரசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமணம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு அடிக்கல்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: