கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி: கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்கள் விடுமுறை வந்த நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனினும், தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை வந்தால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டமே அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், வார விடுமுறை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி என மூன்று நாட்கள் அரசு விடுமுறை கிடைத்த நிலையில் பல நாட்களுக்கு பின் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிகை அதிகமாக காணப்பட்டது.

ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக நேற்று காணப்பட்டது. மேலும், மலை ரயிலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிக்க ஆர்வம் காட்டினர். ஊட்டியில் தற்போது மழை சற்று குறைந்த நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர். கடந்த மாதம் மழை பெய்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், ஊட்டி நகரில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

The post கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: