துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி: சு.வெங்கடேசன்

மதுரை: துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் – மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன்.

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான நிர்வாக நடைமுறைகளை துவக்கி திட்ட அறிக்கையை தயார் செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கினார். நிலம் கையகப்படுத்துதல் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து கவனப்படுத்தினோம். மாவட்ட நிர்வாகம் அதனை விரைந்து முடித்துக் கொடுத்தது.

இந்த பின்னனியில் துவரிமான் – மேலக்கால் சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலமும், சுரங்கப்பாதையும் அமைக்க ரூ 46.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி. விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறையும். எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Related Stories: