புது வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பயங்கரம்; ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் இறந்து கிடந்தார். அவரது தலையின் இடதுபுறம் மற்றும் இடது கையில் 5 வெட்டுக்கள், இடது காலிலும் பலத்த வெட்டு காயம் இருந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் படுகொலை செய்யப்பட்டவர் திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர் வரதராஜ பெருமாள் நகரை சேர்ந்த ரவுடி லோகேஷ் (32) என தெரியவந்தது. இவர் மீது திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புது வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்றிரவு லோகேஷுக்கும் ஒரு கும்பலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கும்பல்தான், லோகேஷை வெட்டி விட்டு தப்பி விட்டதாக தெரியவந்தது. அவர்கள் யார், எதற்காக வெட்டினார்கள் என போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் லோகேஷும் அவரது நண்பரான கானங்கத்த ராஜ் என்பவரும் நேற்று மதியம் மது அருந்தியுள்ளனர். அப்போது புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த சொட்டை பிரகாஷ் (38) என்பவர், அங்கு வந்தார்.

கானங்கத்த ராஜியிடம் சொட்டை பிரகாஷ் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், சொட்டை பிரகாசை தாக்கியுள்ளார். இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த ஷோபன் ராஜ் (32), கரி (எ) விக்கி (25), ரிச்சர்ட் ஹாட்லி (33), நாகூரார் தோட்டத்தை சேர்ந்த வினோத்குமார் (27), முகிலன் (37) ஆகியோரை பிடித்து இன்று காலை விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தலைமறைவான சொட்டை பிரகாஷை பிடித்து விசாரித்தால்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post புது வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பயங்கரம்; ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 5 பேரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: