அவசர அழைப்பு வராததால் சந்தேகம் பிரேசிலில் 62 பேர் பலியான விமான விபத்தில் சதியா?

வின்ஹெடோ: பிரேசிலில் பயணிகளை ஏற்றி சென்ற விமானம் குடியிருப்பின் மீது மோதி நொறுங்கியதில் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தின் காஸ்கேவலில் இருந்து நேற்று முன்தினம் உள்ளூர் விமான நிறுவனமான வியோ பாஸ்க்கு சொந்தமான பயணிகள் விமானம் குவாருஸ்ஹோஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 58 பயணிகள் 4 விமான ஊழியர்கள் உட்பட 62 பேர் இருந்தனர்.

வின்ஹோேடா நகரில் நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே குடியிருப்பின் மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இந்த தீயில் சிக்கி விமானத்தில் இருந்த 62 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் மோதிய குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் யாரேனும் உயிரிழந்தார்களா என்ற அச்சம் எழுந்தது.

ஆனால் இதுவரை அதுபோன்ற எந்த தகவல்கள் வெளிவரவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலங்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரேசில் அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பலி எண்ணிக்கை 61ஆக நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. பின்னர் பட்டியலில் பயணி ஒருவரின் பெயர் விடுபட்டு இருந்தது கண்டறியப்பட்டு பலி எண்ணிக்கை 62 என உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘62 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு முன்னதாக விமானத்தில் இருந்து எந்த அவசர அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதனால் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அவசர அழைப்பு வராததால் சந்தேகம் பிரேசிலில் 62 பேர் பலியான விமான விபத்தில் சதியா? appeared first on Dinakaran.

Related Stories: