ராணி மேரி கல்லூரி முன்பு சாலை நடுவில் அமர்ந்தவர் கார் மோதி பரிதாப பலி

சென்னை: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (36). சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் இருந்து 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மெரினா காமராஜர் சாலையில் ராணி மேரி கல்லூரி அருகே சென்றபோது, சாலை நடுவில் ஒருவர் அமர்ந்து இருந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் வீரமணி, அவர் மீது மோதினார்.

இதில் அந்த நபர் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் வீரமணியை கைது செய்தனர். மேலும் சாலையின் நடுவே இறந்த நபர் அமர்ந்து இருந்ததால், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்றும், அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராணி மேரி கல்லூரி முன்பு சாலை நடுவில் அமர்ந்தவர் கார் மோதி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: