வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்.. மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய அவைத் தலைவர்!!

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அதிருப்தியால் மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையேற்றத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெங்காய மாலை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதனிடையே பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியில் வினேஷ் போகத் எப்படியும் பதக்கம் வெல்வார் என ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்த் திருந்தது. ஆனால் உடல் எடையை காரணம் காட்டி வினேஷ் போகத், போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்கிற பேரிடி இந்தியர்கள் மீது விழுந்தது. இதனால் நாடு அதிர்ச்சியில் உறைந்தது. இந்தியர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது.

இந்திய ஜனாதிபதி முதல் மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் வினேஷ் போகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என குமுறலுடன் உரத்த குரல் எழுப்பி கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் மாநிலங்களவையில் வினேஷ் போகத் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு சபை தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் எழுந்து, ஜெகதீப் தன்கரை நோக்கி ஆவேசமாக பேசினார். இதற்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார். இதனால் சபை தலைவரே வெளிநடப்பு செய்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு வெளி நடப்பு செய்தனர்.

The post வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்.. மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய அவைத் தலைவர்!! appeared first on Dinakaran.

Related Stories: